நவம்பர் மாத உரத்த சிந்தனையில் வெளியான தலையங்கம்
கர்நாடக மாநில அரசியல் இன்று கண்ணறாவி அரசியலாகி அவமானப்பட்டு நிற்கிறது. என்ன செய்வது? எப்படிச் செய்வது? என்று தெரியாமல் பாரதீய ஜனதா கட்சி ‘பரிதாப ஜனதா கட்சி’ யாக காட்சியளிக்கிறது.
இந்திய அரசியல் வரலாற்றிலேயே நம்பிக்கை வாக்கெடுப்பை ஒரே வாரத்தில இரண்டு முறை நடத்தியக் காட்சி இங்குதான் அரங்கேறியுள்ளது. மாநில ஆளுநரின் நடவடிக்கைகளும், எதிர்க்கட்சிகளும், கட்சி மாறிகளும் அடிக்கின்ற கோமாளித் தனங்களும், கட்சித் தாவிய சட்டமன்ற உறுப்பினர்களை நீக்கியது சரியா? தவறா? என்று நீதிமன்றங்கள் பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருப்பதும் வேறெங்கும் காணக்கிடைக்காத விசித்திர நிகழ்வுகள்.
சுயேட்சைகளுக்கும், கட்சி மாறிகளுக்கும் ரூபாய் 50 கோடி வரை விலை பேசப்பட்டு வருவது, பதவி வெறியும், பணத்தாசையும் எப்படி இன்றைய அரசியலை ஆக்டோபஸ் போல பிடித்தாட்டுகிறது என்பது தெரிகிறது.
கர்நாடக அரசியலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் என்றொரு கட்சி அது தானும் வாழாது பிறரையும் வாழவிடாது என்ற மக்களாட்சித் தத்துவத்தைக் கொண்டதொரு கட்சி. ஆனால் இந்தக் கட்சியுடன்தான் பா.ஜ•கவும், காங்கிரஸும் மாறி மாறி பேரம் பேசி வியாபாரம் செய்து, ஆட்சியைப் பிடிக்கத் துடிக்கின்றன•
ஊழலைத் தட்டிக் கேட்க முடியாத . . . எல்லாரையும் திருப்திப்படுத்த முடியாத . . . ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள எதற்கும் எவருக்கும் அடிபணிய தயாராயிருக்கும் எடியூரப்பா மக்களாட்சிக்கு இடையூறப்பாவாகத்தான் தெரிகிறார்.
ஒரு முறை இதே மாநிலத்தின் முதல்வராக திரு. ராமகிருஷ்ண ஹெக்டே இருந்தபோது, பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெள்ளிபெற்றது. இதைத்தொடர்ந்து தோல்விக்குப் பொறுப்பேற்று ஆளுங்கட்சி ராஜினாமா செய்யவேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, சற்றும் யோசிக்காமல் முதல்வர் பதவியைத் தூக்கியெறிந்துவிட்டு, மீண்டும் மக்களிடம் நியாயம் கேட்டு அமோக வெற்றிபெற்றார் ஹெக்டே.
நெஞ்சுரமும், அரசியல் தெளிவும், மக்கள் அபிமானமும் பெற்ற ஹெக்டே போன்ற தலைவர்கள் வாழ்ந்த கர்நாடக அரசியல் இன்று வியாபாரிகள் கூடமாக, கொள்கையற்றவர்களின் கோட்டமாக மானங்கெட்டு நிற்பது கண்டனத்திற்குரியது.
அவப்பெயர் ஆட்சி நடத்துவதைவிட, தவறு செய்த மந்திரிகளைத் தட்டிக்கேட்டு, ஆட்சிக்கும் கட்சிக்கும் முரணாக இருப்பவர்களை ஓரங்கட்டி, பதவியைத் தூக்கியெறிந்துவிட்டு நெஞ்சுரத்தோடு நேர்மையாக மக்களைப் பா ஜ க சந்திக்க வேண்டும் என்பதே உரத்த சிந்தனையுள்ள ஒவ்வொருவரின் எதிர்ப்பார்பாகும்.
13.062852
80.274186
Filed under: இதழ்கள், உரத்த சிந்தனை, செய்திகள் | Tagged: "தலையங்கம்", "உரத்த சிந்தனை"யில் வெளியான "தலையங்கம்", உரத்த சிந்தனை, எடியூரப்பா, கர்நாடகா, காங்கிரஸும், சட்டசபை, ஜாதிப் பிரிவினை, தனிநாடு, தனிமொழி, நகஸலைட்டுகள், நம்பிக்கை வாக்கெடுப்பு, பயங்கரவாதம், பா ஜ க, பிரிவினைவாதிகள், மத தீவிரவாதிகள், மதவாத அரசியல், மானங்கெட்ட அரசியல், முதலமைச்சர், முதல்வராக திரு. ராமகிருஷ்ண ஹெக்டே, முதல்வர், மொழி வெறியர்கள், Confident Vote, Congress, Karnataka, Political, Politics, Ramakrishan Hecte, Uratha Sindhanai, Yediyurappa | Leave a comment »